சென்னை: மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதிக்குட்பட்ட மாஞ்சோலை பிபிடிசி(BBTC) தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்து தர முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான அனைத்து உதவிகளும் அரசால் செய்யப்படுமென திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பொதுநல இயக்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் பணியிழந்த தொழிலாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் வீடுகள், வாழ்வாதாரத்திற்கான உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாஞ்சோலையிலுள்ள பிபிடிசி தேயிலை நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 99 ஆண்டு காலக்குத்தகை 11-02-2028 அன்று முடிவடைவதைக் கருத்திற்கொண்டு, மேற்படி நிறுவனம் மார்ச், 2024ல் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 559 தொழிலாளர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. அப்போதே, அரசு சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த் துறை, வனத்துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது.
அக்குழு, தொழிலாளர்கள் மற்றும் அங்குள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தது. மேலும் அவர்களை விருப்ப ஓய்வில் செல்ல நிறுவனம் கட்டாயப்படுத்தினால் தொழிலாளர் நலத்துறையில் புகார் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் ஓய்வு பெறவுள்ள 23 தொழிலாளர்களைத் தவிர்த்து, 536 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவர்களின் முழு சட்டப்பூர்வ நிதிவரவுகள் மற்றும் நிறுவனத்தால் விருப்ப ஓய்வுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கருணைத் தொகையில் 25% ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டனர் என நிறுவனத்தின் சார்பில் தொழிலாளர் நலத்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.


