சென்னை: திருநங்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவி.
திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக வில்லிசையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேவை புரிந்து வரும் சந்தியா தேவிக்கு 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருது, ரூ.1 லட்சம் காசோலை, பாராட்டுச் சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிப் பாராட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்தவர் திருநங்கை சந்தியா தேவி. பூ கட்டும் தொழில் செய்து தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
வில்லிசையில் ஆர்வம் ஏற்பட்டு புராணக் கதைகளைப் படித்து தன் தனித்திறமையால் 1000க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் நடத்தியுள்ளார்.
வில்லிசை நிகழ்ச்சி மூலம் கொவிட்-19 விழிப்புணர்வு, சமூக நலத் திட்டங்கள், வரதட்சணை தடுப்பு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
பல திருநங்கைகளுக்கு அவர்கள் சுயமாக வருமானம் ஈட்டும் வகையில் வில்லிசையைக் கற்றுக் கொடுத்து கிராமியக் கலைகளில் ஈடுபட உதவி வருகிறார்.
தோவாளையைச் சார்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் ஒரு ஏழை சிறுவனின் படிப்பிற்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளதோடு, மனவளர்ச்சி குன்றிய எட்டு வயது குழந்தை ஒன்றையும் தத்தெடுத்து பராமரித்து வருகிறார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில், சமூக நலன், மகளிர் உரிமை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலாளர் துறை சிவ்தாஸ் மீனா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

