கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி போராட்டம்; 520 பேர் கைது

2 mins read
969ae9ca-aad2-42b2-8704-3cf14f308f2f
திருமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாரையும் அதிமுக தொண்டர்களையும் கைதுசெய்து காவல் வாகனத்தில் ஏற்றிச்செல்லும் காவலர்கள். - படம்: ஊடகம்
multi-img1 of 2

மதுரை: மதுரைக்கு அருகேயுள்ள கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தி, திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, அங்கு வந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 520 பேரைக் கைது செய்தனர்.

ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிமுகவினரை காவலர்கள் கைது செய்தனர். அப்போது அதிமுகவினருக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பலருக்கும் சட்டை கிழிந்து காவல்துறையினருடன் வாக்குவாதம் முற்றியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அதையடுத்து காவல்துறையைக் கண்டித்து அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவலர்கள் கைது செய்து மேலக்கோட்டை திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்வதாகக் கூறப்படுகிறது.

மதுரை - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்துக்குச் சொந்தமான சுங்கச்சாவடி 2012ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடி, 60 கி.மீ., தொலைவுக்குள் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறி அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

நான்கு வழிச்சாலையை பயன்படுத்துவோர் மட்டுமே சுங்கச்சாவடிக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த சாலையைப் பயன்படுத்தாத திருமங்கலம் சுற்றுவட்டார மக்கள், தென்காசி, ராஜபாளையம் செல்வோரும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதுபோல், கப்பலூரில் உள்ள சிப்காட் தொழிற்சாலை வளாகத்திற்குச் செல்லக் கூடியவர்களும் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது.

இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையும் ஏற்பட்டு வந்தது. இந்த சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்பது திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி பொதுமக்கள், வணிகர்கள், கப்பலூர் தொழில்துறையினர் ஆகியோரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

தற்காலிக தீர்வாக, 2020ஆம் ஆண்டு முதல், உள்ளூர் மக்களின் வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியில் கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் 10ஆம் தேதி முதல் திடீரென்று, கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கும் 50 விழுக்காடு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த திருமங்கலம் சுற்றுவட்டார கிராம மக்கள், தொழில்துறையினர், ஆட்டோ, சரக்கு வாகன ஓட்டிகள், அதிமுகவினர், கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்