சென்னை: சென்னையில் அரசு கலைத்துறை சார்பில் சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை மூன்று நாள்களுக்கு நடைபெறும் ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஓவியம் மற்றும் கலை வல்லுநர்களின் படைப்புகள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கலை, பண்பாட்டுத்துறையின் வாயிலாக ஓவிய, சிற்பக் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் செய்யும் ‘ஓவியச் சந்தை’ திட்டத்தைச் செயல்படுத்த ரூ.10 லட்சம் நிதி உதவி செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் கோயம்புத்தூரில் கலைஞர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்த அந்த நிதி வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ஓவியச் சந்தைத் திட்டம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது.
சிற்பக் கலைஞர்களுக்காக மாநில அளவிலான ஓவியக் கண்காட்சியை நடத்தி, சிறந்த கலைப்படைப்புகளுக்கு பரிசுகள் வழங்க அந்தத் திட்டம் ஊக்குவிக்கிறது.

