சென்னை: சென்னை கொளத்தூர் அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ரத்னகுமார் - ராணி தம்பதிக்கு கீர்த்தி சபரீஸ்கர், 10, என்ற மகன் இருந்தார். சிறப்பு குழந்தையான இவருக்கு மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இதற்காக சென்னை கொளத்தூரில் தனியாருக்குச் சொந்தமான நீச்சல் குளம் பயிற்சி மையத்தில், சிறுவனுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் ஞாயிறு மாலை (ஆகஸ்ட் 4) வழக்கம் போல் சிறுவனின் தந்தையும், தாயும் சிறுவனை நீச்சல் பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறுவனின் தாய், நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் தனது மகனை அருகில் இருந்து கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திடீரென சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், பயிற்சியாளரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கியுள்ளார். இதையடுத்து ராணி, தனது கணவருடன் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொளத்தூர் காவல்துறை சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
நீச்சல் பயிற்சி மையத்தின் உரிமையாளர், பயிற்சியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். காவல்துறை விசாரணை தொடர்கிறது.

