சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.50 மணிக்கு நடைபெற உள்ளது.
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய தற்காப்பு ராஜ்நாத்சிங் பங்கேற்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோரும் பங்கேற்க முதலமைச்சர் விரும்புகிறார்.
அதன் அடிப்படையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது வீடு தேடி சென்று தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் அழைப்பிதழ் கொடுத்து உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் கூட்டணிக் கட்சித் தலைவர்களான தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா, நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.
இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.