சென்னை: தமிழ்நாட்டில் குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அத்துடன் வழிகாட்டு நெறிமுறைகளையும் அது வெளியிட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை வேகமாக பரவிய நிலையில், சுவீடனிலும் இந்த நோயின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரங்கம்மைப் பரவலை சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை குரங்கம்மை பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களின் சுகாதார அதிகாரிகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.
அதில், “குரங்கம்மை பாதிப்புள்ளவர்கள் என யார் மீதாவது சந்தேகமிருந்தால், உடனடியாக தெரிவிக்க வேண்டும். மேலும், அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
“குறிப்பாக, காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயணிகளுக்கு வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளவேண்டும்.
“யாரிடமாவது குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டால், அதுகுறித்து அவர் பயணம் செய்த விமான நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். அந்த விமான நிறுவனம் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.