சென்னை: தமிழகத்தில் 3வது முறையாக சுற்றுலாத்துறை மூலம் மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தை கடற்கரை பகுதியில் அனைத்துலகப் பட்டம் விடும் திருவிழா நடைபெற்று வருகிறது.
வியாழக்கிழமை தொடங்கிய இந்த பட்டம் விடும் திருவிழா வருகிற 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது.
தினமும் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில், திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் அனைத்துலகப் பட்டம் விடும் திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை களைகட்டியது.
சுறா மீன், பாண்டா கரடி, கொரில்லா குரங்கு, புலி உள்பட பல்வேறு உருவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட பட்டங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
வானில் சிறகடித்து பறந்த பட்டங்களை சுற்றுலா பயணிகள் தங்கள் கைபேசியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் பட்டம் பறக்க விடுவதில் கைதேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் என 200க்கும் மேற்பட்டோர் 10 அணிகளாகப் பிரிந்து பட்டங்களை பறக்கவிடுகின்றனர்.


