சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியிடப்படும் நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஞாயிறு மாலை (ஆகஸ்ட் 18) நடைபெறுகிறது.
இந்த நிலையில், கருணாநிதி உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிடும் நிகழ்வுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 16ஆம் தேதி எழுதப்பட்ட கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது கடிதத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். பலமுறை மக்கள் பிரதிநிதியாகத் தேர்வு செய்யப்பட்ட அவர், அரசியல், இலக்கியம், சமூகப் பணிகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவர் தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சிக்கு அதிகமாகக் குரல் கொடுத்துள்ளார். 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வை உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலினும் நன்றி தெரிவித்துள்ளார்.