சிவகங்கை: இந்திய சுதந்திர தின விழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட சூழலில், சிவகங்கையைச் சேர்ந்த ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர், வ.உ.சிதம்பரனார் வேடமிட்டு 17 கிலோமீட்டர் தூரம் மிதிவண்டி பயணம் மேற்கொண்டது பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சுதந்திரப் போராட்டத் தியாகி ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் வீர வரலாற்றை நினைவூட்டும் விதமாக தலைப்பாகை, கம்பீரமான மீசையுடன் அச்சு அசல் வ.உ.சி போன்றே வேடமணிந்த அந்த ஆசிரியர், தமது இந்தச் செயல், இளையர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புவதாகக் கூறினார்.
சிவகங்கையின் முக்கியச் சாலைகள் வழியாக இடைவிடாமல் 17 கி.மீ. தூரத்திற்கு மிதிவண்டியை மிதித்து வலம் வந்த அவர், இந்த விழிப்புணர்வுப் பயணத்தின் மூலம், நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தியாகிகளின் வரலாற்றைப் போற்றுவதாகவும், தற்காலத்திற்கு மிக அவசியமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.
இளையர்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவைகளுக்கு எரிபொருள் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, உடலுக்கும் இயற்கைக்கும் நன்மைகளைத் தரும் மிதிவண்டிகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடம் இரட்டை விழிப்புணர்வு முழக்கத்தை முன்வைத்துள்ளார் அந்த ஆசிரியர்.


