சென்னை: வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் தி.மு.க. தலைமை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில், பல மாதங்களுக்கு முன்னதாகவே, தேர்தல் ஒருங்கிணைப்பாளர் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவினர் அவ்வப்போது ஆலோசனை நடத்தி, பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
குறிப்பாக, கட்சியில் மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து, அதன்மூலம் இளம் நிர்வாகிகளுக்குப் பொறுப்புகளை வழங்குவது, மாவட்ட வாரியாகப் பணிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கும் பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அண்மையில் பார்வையாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் தோல்வியடைந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டதுடன், சிறப்பாகப் பணியாற்றினால் தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் சூசகமாகக் கூறி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தியுள்ளார்.
அத்துடன், நிர்வாகிகளிடம் 200 தொகுதிகள் என்ற இலக்கையும் வழங்கி அதற்கேற்ப பணியாற்ற அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக தேர்தல் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தைக் கூட்ட கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் 15வது செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்பின், 16வது மற்றும் இந்த ஆண்டுக்கான பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டியுள்ளது.
தற்போது பருவமழைக் காலம் என்பதால், வருகிற ஜனவரி மாதம் இந்தக் கூட்டத்தை நடத்தலாம் என்று தி.மு.க. தலைமை முடிவெடுத்துள்ளது.
தி.மு.க. பொதுக்குழுவில் ஏறக்குறைய 3,500 பேருக்கு மேல் உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கம் போதாது.
இதனால் சென்னையைத் தவிர்த்து வேறு மாவட்டங்களில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தின் மையப்பகுதியாகத் திகழும் திருச்சியில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கான இடம் மற்றும் பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் தீர்மானங்கள் குறித்து இறுதி செய்யப்பட உள்ளது. இந்த முறை திருச்சியில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படுவது திருச்சி மாவட்ட தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, பொதுக்குழுக் கூட்டத்தை மதுரையில் நடத்தலாமா என்றும் கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

