கோவை: கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ரவியிடம் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் பிரகாஷ், பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாக அவரிடம் புகார் மனுவும் கொடுத்தார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.
அப்போது, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றுக்கொள்ள வந்திருந்த மாணவர் பிரகாஷ் ஆளுநரிடம் புகார் மனு அளித்தார். அதில் பி.எச்.டி. மாணவர்களிடம் முனைவர் பட்டம் பெற வழிகாட்டும் பேராசிரியர்கள் பணம் கேட்பதாக பிரகாஷ் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், தனிப்பட்ட வேலைகளைப் பேராசியர்கள் செய்யச் சொல்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் நடக்கும் முறைகேடுகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரகாஷ் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ரவி புகார் மனுவைப் பெற்றுக்கொண்டார். அதையடுத்து, முனைவர் பட்டத்துடன் ஆளுநர் ரவியுடன் பிரகாஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டு மேடையைவிட்டு கீழே இறங்கினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.