சென்னை: வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று மாணவியை தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவியை பள்ளியின் தமிழ் ஆசிரியையான சித்ரா வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக்கூறி ஒருநாள் 200 முறையும், மறுநாள் 400 முறையும் தோப்புக்கரணம் போட வைத்துள்ளார்.
இதனால் களைப்படைந்த சிறுமியின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலமுறை தோப்புக்கரணம் போட்டதால் அவரது உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மகளின் உடல்நிலை பாதிப்புக்குக் காரணமான ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் தாய் பாண்டிசெல்வி, தமிழ் நாடு மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.
மனுவை விசாரித்த ஆணையம், ஆவணங்களின்படி, ஆசிரியை சித்ரா மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரிகிறது. எனவே, பாதிக்கப்பட்டவருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். அதை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்” என உத்தரவிட்டது.