காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும், பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவ, மாணவிகள் இதுவரை ஒருநாள் ஆட்சியராகி, கலெக்டர் மணிகண்டனுடன் பணியாற்றியுள்ளனர். அந்த வரிசையில், காரைக்காலை அடுத்த நிரவி ஹுசைனியா அரசு உயர் நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி தஸ்னீம் அர்ஷியா, காரைக்கால் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளால், பேச்சாற்றல், அறிவுத் திறன் போன்ற செயல்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அம்மாணவி மாவட்ட ஆட்சியர் மணிகண்டனுடன் இணைந்து, பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் பல்வேறு பணிகளில் மாணவி மாவட்ட ஆட்சியர் மணிகண்டனுடன் இணைந்து செயல்பட்டார். மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், அனைத்து அதிகாரிகளிடமும் மாணவியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, ஆட்சியர் மணிகண்டன் கூறுகையில், ஒவ்வொரு மாணவரும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு உங்கள் கல்வி ஒன்றுதான் முக்கியம் என்ற ஆட்சியர், மாணவியிடம் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கேட்டார்.
அதற்கு மாணவி தஸ்னீம் அர்ஷியா பேசுகையில், “ஓர் ஆட்சியருக்கான அதிகாரம், செயல்பாடு இவை அனைத்தையும், இன்று கண்கூடாகக் கண்டேன். எதிர்காலத்தில் நானும் ஐ.ஏ.எஸ். படித்து மாவட்ட ஆட்சியராகி மக்களுக்குச் சிறப்பான பணியைச் செய்வேன்,” என உறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா, மாணவியின் பெற்றோர் முகமது கியாசுதீன், நூருல் ஹையாத், பள்ளியின் முதல்வர், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


