புதுடெல்லி: இந்தியாவின் புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக்(படம்) இங்கிலாந்தின் உயரிய விருதைப் பெற்றுள்ளார்.
பிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர் என்ற இந்த விருது, தெற்கு இங்கிலாந்தின் வேமவுத் நகரில் ‘சாண்ட்வேர்ல்டு 2025’ என்ற மணல் சிற்ப திருவிழாவில் வழங்கப்பட்டது.
இதில், சுதர்சன் பட்நாயக் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக அமைதியை வலியுறுத்தும் வகையில் பத்து அடி நீளமுள்ள பிள்ளையார் சிற்பம் ஒன்றை தெற்கு இங்கிலாந்து கடற்கரையில் வடிவமைத்திருந்தார் சுதர்சன். இதற்காகத்தான் தனக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என்றார் அவர். விருது, பதக்கத்தை வேமவுத் மேயர் ஜோன் ஓரல் வழங்கினார்.
இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சுதர்சன் பட்நாயக்.
அனைத்துலக அளவில் இதுவரை 65க்கும் மேற்பட்ட மணல் சிற்ப போட்டிகள், திருவிழாக்களில் பங்கேற்றுள்ள சுதர்சன், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.