கடலூர்: தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் அனைத்துலக மையம் கட்ட உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் வடலூரில் வள்ளலார் அனைத்துலக மையத்திற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அம்மையத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதித்தது. அதனையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்திலும் தமிழக அரசுக்குச் சாதகமான முடிவு கிடைக்கவில்லை.
வழக்கு விசாரணை முடியும்வரை வடலூரில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் அனைத்துலக மையத்தின் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
வள்ளலாரின் கருத்துகளைப் பரப்பும் வகையில் வள்ளலார் அனைத்துலக மையம் அமைக்கப்படும் என்று கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தலில் திமுக வென்றதை அடுத்து, அம்மையத்தை அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்காக ரூ.99.90 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

