தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் மொழி வார விழா: தமிழக அரசு

2 mins read
a35e7fb0-c7a7-4dcc-821b-86b209c68a0a
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் நாட்டில் ஏப்ரல் 29 முதல் மே 5ஆம் தேதி வரை தமிழ் மொழி வாரமாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை தமிழ் மொழி வார விழா கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “பல்வேறு சிறப்பிற்குரிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான பாவேந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும். இந்த ஒரு வார காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்மொழியையும், பாவேந்தர் பாரதிதாசனின் பங்களிப்பையும் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

* இலக்கிய கருத்தரங்குகள், கவியரங்கங்கள்: “எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்” என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும். சிறந்த தமிழறிஞர்கள் மற்றும் இளங்கவிஞர்கள் இதில் பங்கேற்பார்கள்.

* பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது: தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர், கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.

* தமிழ் இலக்கியம் போற்றுவோம்: புகழ்பெற்ற இலக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வரங்கங்கள் நடத்தப்படும்.

* பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள்: மாணவர்களிடையே தமிழ்மொழியின் பெருமையை எடுத்துரைக்க பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

* தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள்: தமிழ் இசை, நடனம், மற்றும் மரபுக்கலைகளை மையப்படுத்திய கலை நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெறும்.

இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள் மூலமாக பாவேந்தர் பிறந்த நாள் தமிழ் மணக்கும் வாரமாகக் கொண்டாடப்படும். தமிழ் வார விழா நமது மொழியின் பெருமையை உலகிற்கு எடுத்துரைப்பதற்கு ஒரு நல்வாய்ப்பாகும். தமிழ்மொழியை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம் என்று ஸ்டாலின் அந்த உரையில் தெரிவித்தார்.

‘வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்’ என்றார் பாவேந்தர். அத்தகைய எழுச்சியை இந்த விழாக்கள் மூலம் உருவாக்க வேண்டும்.

செந்தமிழைப் பரப்ப இந்த விழாக்கள் பயன்படும். தமிழர் தம் அறிவுச் செல்வத்தைக் காட்ட இந்த விழாக்கள் பயன்படும். தமிழ் உணர்ச்சியை மங்காமல், குன்றாமல் இந்த அரசு காத்திடும் என்று மு.க. ஸ்டாலின் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றினார்.

குறிப்புச் சொற்கள்