தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் அரசுமுறைப் பயணமாகப் பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரத்தைச் சென்றடைந்தார்.
தமிழகத்திற்குப் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வியாழக்கிழமை (செப்டம்பர் 10) இரவு 10.05 மணிக்குச் சென்னை விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் புறப்பட்டார்.
துபாய் வழியாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இந்திய நேரப்படி காலை 11.30 மணியளவில் அவர் சென்றடைந்தார்.
விமான நிலையத்திற்கு வந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள், பூங்கொத்துகள் கொடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
ஆறு நாள்கள் அங்குத் தங்கியிருக்கும் அவர், முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக முன்னணித் தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார்.
செப்டம்பர் 16ஆம் தேதிவரை அங்கே பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார்.
புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ மைதானத்தைப் பார்வையிட்டு, நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயப் போட்டியையும் தொடங்கிவைக்கவுள்ளார்.
முதல்வர் விஜய்யுடன் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
மாநிலத்தில் உயர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், மேம்பட்ட உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் (GCC) ஆகிய துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதை இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழக அரசு பொறுப்பேற்ற 100 நாள்களுக்குள் ₹1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கான இணக்கக் குறிப்புகள் கையெழுத்தாகியுள்ளதாக அரசாங்கச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஏறக்குறைய ₹8,491 கோடி மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களை முன்மொழிந்துள்ளன. இதன் மூலம் சுமார் 5,690 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, முதல்வர் பயணம் செய்த எமிரேட்ஸ் ‘யுஏஇ547’ விமானத்தை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் ‘டிராக்’ செய்துள்ளனர்.
இதனால், ‘ஃபிளைட் ரேடார்’ இணையத்தளத்தில் உலகளவில் அதிகளவில் ‘டிராக்’ செய்யப்பட்ட விமானப் பட்டியலில் இது முதலிடத்தைப் பிடித்தது. முன்னதாகத் தேர்தல் பிரசாரத்தின்போதும் அவர் பயணம் செய்த தனி விமானம் அதிகளவில் ‘டிராக்’ செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

