சென்னை: தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம், ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த அபராதத்தை மனிதாபிமானத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழக மீனவர்கள் தங்களின் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவதாகவும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 21ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதின்றம் 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
“இது ஏற்கெனவே துயரத்தில் உள்ள மீனவக் குடும்பங்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இது மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும்.
“எனவே, இலங்கை வசம் உள்ள மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வேண்டும். மீனவர்களைத் தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

