ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, பின்னர் நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, தமிழக மீனவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ராமேசுவரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லை கடந்து வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த மாதம் 27ஆம் தேதி, இலங்கைக் கடற்படை எட்டு தமிழக மீனவர்களைக் கைது செய்தது.
நீதிமன்ற விசாரணையின்போது, இவர்களில் ஐந்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மூன்று மீனவர்கள் இரண்டாவது முறையாக கடல் எல்லையைக் கடந்ததாகக் கூறி, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்கள், உறவினர்களின் உதவியோடு அத்தொகையை கடந்த 7ஆம் தேதி செலுத்தினர்.
ஆனால், 6ஆம் தேதிக்குள் அதைச் செலுத்தியிருக்க வேண்டும் என்று கூறி, இலங்கை சிறைத்துறையினர் மீனவர்களுக்கு கைவிலங்கிட்டு மொட்டை அடித்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சிறைச்சாலைக் கழிவறைகள், கழிவுநீர் கால்வாய்களைச் சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்தியதாகவும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சிறைத்துறையினரைக் கண்டித்து ராமேசுவரம், மதுரை நெடுஞ்சாலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

