சென்னை: மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
பாடகர் யேசுதாசுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவதுடன் பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோரின் பெயர்களில் இந்திய அளவிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசு கலைமாமணி விருதுகளை அறிவிக்கவில்லை. இந்நிலையில், 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் நடக்கவுள்ள விழாவில், முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கிக் கௌரவிப்பார் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கலை நிறுவனத்திற்கும் சிறந்த நாடகக்குழுவிற்கும் கேடயங்கள் வழங்கப்படும். விருது பெறும் அனைத்து கலைஞர்களுக்கும் மூன்று பவுன் எடையுள்ள தங்கப்பதக்கம், விருதுப் பட்டயம் வழங்கப்படும்.
நடிகை சாய் பல்லவி, நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.