சென்னை: மாநகராட்சி தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்குவது தொடர்பான ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் 25 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை தவிர்த்த, 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு அண்மையில் ஒப்பந்தப்புள்ளி கோரியது.
இதற்கு, தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் தனியார்மயமாக்குவதை கைவிடக் கோரி முதல்வர் விஜய்யை வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்த தமிழக அரசின் முடிவை வரவேற்பதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து வகையான தூய்மைப் பணியாளர்களுக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள், சமூகப் பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் மற்றும் பணியிட நலன்களை முழுமையாக உறுதி செய்ய வேண்டும்.
பொதுச் சேவைகளில் தனியார் மயக் கொள்கைகளுக்கு இடமளிக்காமல், நிரந்தரப் பணியாளர்களின் மூலம் சேவைகளை வலுப்படுத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

