சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஏகனாபுரம் பகுதியில் விரைவில் புதிய சமூக நலக்கூடம் கட்டித்தரப்படும் என அமைச்சர் வன்னி அரசு சட்டமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
சட்டமன்றத்தில் சமூக நீதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பின் பேசிய அவர், சமூக நீதியும் சமத்துவமும்தான் தமிழக அரசின் இலக்கு என்றார்.
அண்மையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, போராட்டக் குழுவினர் முதலமைச்சரையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அந்தச் சந்திப்பின்போது, ஏகனாபுரத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக சமூக நலக்கூடம் அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இக்கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலித்து ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஏகனாபுரத்தில் விரைவில் புதிய சமூக நலக்கூடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வன்னி அரசு தமது உரையில் சுட்டிக்காட்டினார்.
சாதி ஒழிப்பு, சமூக விடுதலையை முதன்மையாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் ஆதிதிராவிடர்-பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


