சென்னை: தெருநாய்களுக்காக தமிழகத்தில் 72 காப்பகங்கள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தமிழகத்தில் இதுவரை 4.77 லட்சம் ‘ரேபிஸ்’ (வெறி நாய்க்கடி) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“நாய்களுக்கு கருத்தடை செய்ய 450 கால்நடை மருத்துவர்களுக்கு கால்நடைப் பல்கலைகள் மூலம் 15 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
“மேலும், 500 உதவி மருத்துவர்களுக்கும் 500 உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. 25 மாநகராட்சிகளில் நாய்களுக்கான 86 கருத்தடை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
“சென்னை மாநகராட்சியில் மட்டும் ஐந்து கருத்தடை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 10 மையங்களை கூடுதலாக உருவாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தெருநாய்களுக்காக 72 காப்பகங்கள் உருவாக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கைவிடப்பட்ட நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் நலனுக்காக இந்த ஆண்டு மட்டும் இதுவரை 25 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

