சென்னை: தமிழக சட்டப்பேரவை வரும் டிசம்பர் 9ஆம் தேதி கூடவுள்ளது. கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திங்கட்கிழமை நவம்பர் 25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழ்நாடு சட்டப்பேரவை விதியின்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது, வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி காலை 9.30 மணிக்குத் தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும்.
“அலுவல் ஆய்வுக் குழுவில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். எனவே அவர்கள்தான், கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பதை முடிவு செய்வர். சட்டமன்ற நிகழ்வுகள் ஏற்கெனவே நேரலை செய்யப்படுகிறது. கூட்டத்தொடரை முழுமையாக நேரலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலினின் வருகைக்குப் பிறகுதான், நேரலை ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“மேலும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் தொடர்பாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகம் ஏஐ தொழில்நுட்பத்தில் முதன்மை மாநிலமாக உள்ளது. மாணவர்களுக்கு இது பயனளிக்கும். அதேபோல் சட்டப் ரேவையிலும் காகிதமில்லாத முறைதான் உள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, அரசு ஊழியர்கள் கோரிக்கை, தேர்தல் வாக்குறுதிகள், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


