ஏற்பாடுகளைத் தொடங்கியது தமிழகத் தேர்தல் ஆணையம்

டிசம்பருக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தல்

2 mins read
3f288f6a-095b-4266-bdd0-fdb835ed350f
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு தகுந்த நேரத்தில் வெளியாகும் என்று மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தும் விதமாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வாக்காளர் பட்டியலை மாநிலத் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அந்த உள்ளாட்சிகளுக்கான பதவிக்காலம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

இதனையடுத்து, பதவி காலியாகும் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த ஆணையம் தயாராகி வருகிறது.

அதற்கேதுவாக, சட்டமன்றத் தொகுதிவாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களை தருமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

அக்கடிதத்தில், “தமிழகத்தில் உள்ள உள்ளாட்சிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல்களை விரைவில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

“தற்போதுள்ள சட்டமன்ற வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை ஆண்டுதோறும் அல்லது தற்செயலாக தேவைப்படும் காலங்களுக்கு தயாரிக்க வேண்டும்.

“இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

“இதன் அடிப்படையில், கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிவாரியான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தற்போது உள்ளாட்சிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டியுள்ளது.

“எனவே, கடந்த மார்ச் 28ஆம் தேதி சட்டமன்றத் தொகுதிவாரியாக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அச்சு மற்றும் மென்பிரதிகளை வழங்கும்படி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தாங்கள் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

“தரவுகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியாகும்,” என்று மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்