சென்னை: தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வியாழக்கிழமை காலை 10 மணிக்குக் கூடியது.
ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் முதன்முறையாக உரையாற்றிய கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து தேசிய கீதமும் ஒலித்தது. இதில் ஏதேனும் சர்ச்சை உருவாகுமோ என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தொடர் சலசலப்புகள் இன்றி சுமுகமாகத் தொடங்கியது. ஆனால், எவ்வித சர்ச்சையோ சலசலப்போ இன்றி ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உரையாற்றினார்.
முன்னதாக தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநரை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்துடன் வரவேற்றனர்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தின் 17வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கியது.
இந்த கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.
முன்னதாக முதல்வரும் அமைச்சர்களும் பதவியேற்ற விழாக்களின் போது, ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் அர்லேகர் தனது உரையை வாசித்தார். அவர் தனது உரையில், அறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். மேலும், பெயர்கள் உச்சரிப்பில் பிழைகள் இருந்தால் பொறுத்தருளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஜனவரி மாதம் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேரவையில் வாசிக்காமல் வெளி நடப்புச் செய்தார்.
அதன்பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்டுமே பேரவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அப்போதைய பேரவைத் தலைவர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

