ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை அருகே பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது. அதைப் பார்வையிட பாஜகவின் மூத்த நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன் சென்றிருந்தார்.
முன்னதாக அங்கு வந்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், திமுகவுடன் கூட்டணி வைத்து காமராஜர் ஆட்சியைத் தருவோம் என்கிறார் செல்வப் பெருந்தகை. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனோ, திமுக ஆட்சிதான் காமராஜர் ஆட்சி என்று கூறி வருகிறார். காங்கிரசின் இன்னொரு தலைவரான கார்த்திக் சிதம்பரம் வேறொரு காமராஜர் ஆட்சியைப் பற்றி பேசி வருகிறார்.
பாஜகவைப் பொறுத்தமட்டில் நரேந்திர மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி. ஏனெனில் அவர்தான் நாட்டு மக்களுக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருகிறார்.
காமராஜரும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தார். ஊழலற்ற ஆட்சியைத் தந்தார். அதேபோல்தான் இப்போது நடக்கும் மோடியின் ஆட்சியும் ஊழலற்ற ஆட்சி என்று கூறியுள்ளார்.