தஞ்சாவூர்: தஞ்சை அரசுப் பள்ளியில் ஓய்வறையில் இருந்த தமிழ் ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டார்.
மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (23). இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகக் கடந்த சில மாதங்களாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் (30) என்பவர் ரமணியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு தனது பெற்றோரிடம் கூறி பெண் கேட்கச் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து, ரமணி வீட்டுக்கு சில நாள்களுக்கு முன் பெண் கேட்டுச்சென்ற மதனின் பெற்றோரிடம், ரமணிக்கு மதனை திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை என ரமணியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மதன், நேற்று புதன்கிழமை காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமணி ஓய்வறையில் இருந்தபோது அங்கு வந்து அவரிடம் பேசுவதுபோல் பேசி அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியதில் ரமணி மயங்கி விழுந்தார்.
உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார் .
இந்தக் கொலை சம்பந்தமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்திருக்கும் அறிக்கையில், “தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியர் ரமணி என்பவர் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தமிழ் பாடம் போதித்து வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவருக்கு முதல் பாடவேளையில் வகுப்பு இல்லாததால் அவர் ஓய்வு அறையில் இருந்தார். அவரைச் சந்திக்க வந்த மதனிடம் அவர் பேசிக்கொண்டு இருந்தார். யாரும் எதிர்பார்க்காத வேளையில் அவர் ஆசிரியர் ரமணியின் கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயற்சி செய்தான்.
அவனை இப்பள்ளியின் ஆசிரியர்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். ஆசிரியர் ரமணியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டார். இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து, “திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “தஞ்சையில் அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவுக்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது. சட்டம் ஒழுங்கைக் காப்பதில் திமுக முதல்வர் இனியாவது கவனம் செலுத்த வேண்டும்,” என்று இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “அண்மையில் கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்கு முன்பாகவே அரசுப் பள்ளி வளாகத்திற்குள் நடந்திருக்கும் இந்த கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
“திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை ஆண்டுகளில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெறாத நாள்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
“தமிழகத்தில் பொதுமக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியிருக்கும் திமுக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
“எனவே, இனியாவது விழித்து தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களையத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், “உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்தினருக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.