காரைக்குடி: தீ விபத்தில் காயமடைந்த குன்றக்குடியில் சண்முகநாதர் திருக்கோயில் யானை உயிரிழந்தது.
காரைக்குடி அருகே குன்றக்குடியில் உள்ள சண்முகநாதர் திருக்கோயிலுக்கு கடந்த 1971ஆம் ஆண்டு பக்தர் ஒருவரால் யானை `சுப்புலட்சுமி’ வழங்கப்பட்டது.
இந்த யானை கோயில் அருகேயுள்ள தகரக் கொட்டகையில் தங்கவைக்கப்பட்டிருந்தது.
வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அடியில் ஓலை வேயப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு அந்தக் கொட்டகையில் மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, தீ மளமளவென ஓலையில் பரவியது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
அந்த விபத்தில் யானை சுப்புலட்சுமிக்கு காயம் ஏற்பட்டது. வனத்துறை, கால்நடை பராமரிப்புத் துறையினர் கால்நடை மருத்துவர்கள் மூலம் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.