கோவில் திருவிழா: தேரில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

கோவில் திருவிழா: தேரில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

1 mins read
920f0a0f-a692-40c3-86a6-c7eb46cca856
ஹர்ஷவர்தன். - படம்: மாலை மலர்

திருச்செங்கோடு: வைகாசி விசாகத்தை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தின்போது ஏற்பட்ட விபத்தில் இளையர் ஒருவர் உயிரிழந்தது திருச்செங்கோட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.

அங்குள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகம் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக, தேரோட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடி எல்லாம் நடந்துவந்த நிலையில், தேரோட்டத்தின்போது குறிப்பிட்ட ஓர் இடத்தில் அதைத் திருப்ப வேண்டியிருந்தது. இதில் பல இளையர்கள் உதவினர்.

இப்போது ஹர்ஷவர்தன் என்ற 19 வயது இளையர் தேர் திரும்புகையில் அதன் சக்கரத்திற்கும் அருகே இருந்த சுவற்றுக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.

இதனால் மார்புக்கூடு நசுங்கிப்போன நிலையில், மூச்சுத்திணறலுக்கு ஆளான அவரை, பலத்த காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

இதேபோல் காயமடைந்த மேலும் ஒரு கல்லூரி மாணவர் சஷ்டிகன் (19), மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த இளையரின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிவார நிதியாக அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்