சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, தனது மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திங்கட்கிழமை (மார்ச் 30) வெளியிட்டது.
இதில் நட்சத்திர வேட்பாளர்களுக்கு எதிராக வலுவான வேட்பாளர்களைக் களமிறக்கி அறிவித்துள்ளார் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
பெரம்பூரில் நேரடி மோதல்
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில், பாமகவின் மாநிலப் பொருளாளர் திலகபாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
துணிச்சலான பேச்சின் மூலம் பிரபலமாக அறியப்படும் திலகபாமா களம் இறக்கப்பட்டுள்ளதால், பெரம்பூர் தொகுதி தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தருமபுரியில் சௌமியா அன்புமணி
பாமகவின் கோட்டையாகக் கருதப்படும் தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில், பசுமைத் தாயகம் இயக்கத்தின் தலைவரும் அன்புமணி ராமதாசின் மனைவியுமான சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரியில் அவர் காட்டிய செல்வாக்கைத் தொடர்ந்து, இம்முறை நடக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் அவர் களம் காண்கிறார்.
மற்றொரு நட்சத்திரப் போட்டியாளர்
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியில், பாமக சார்பில் தமிழரசி ஆதிமூலம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
பாமகவின் முக்கிய முகமான செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு திருப்போரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

