வேலூர்: உலகின் மூன்றாவது ஆக உயரமான முருகன் சிலை வேலூர் மாவட்டம், புதுவசூர் தீர்த்தகிரி முருகன் கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
இந்தக் கோவிலின் அருகே நிறுவப்பட்டுள்ள முருகன் சிலையின் உயரம் 92 அடி. தீர்த்தகிரி மலையின் உயரம் 500 அடியாகும்.
இங்குள்ள வடிவேல் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பழமை வாய்ந்தது.
தற்போது நிறுவப்பட்டுள்ள சிலையை மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் ஸ்தபதிதான் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற இக்கோவிலின் குடமுழுக்கு நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குடமுழுக்கையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு வாண வேடிக்கை நடத்தப்பட்டது. மேலும் அலங்கார தரிசனம், திருக்கல்யாண வைபவம், சுவாமி திருவீதி உலாவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.