தொண்டரை அறைந்த திருமாவளவன்

தொண்டரை அறைந்த திருமாவளவன்

1 mins read
011a4184-fadb-48c0-b1f3-e0f13cb09489
ரகளையில் ஈடுபட்ட தொண்டரின் கன்னத்தில் திருமாவளவன் அறைந்த காட்சி. - படம்: மாலை மலர்

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கட்சி (திமுக) கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

தமது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெரியகுளம் சென்றார்.

அப்போது, அவர் பயணம் செய்த பிரசார வாகனத்தில் அக்கட்சியினர் சிலர் ஏறி அவரைப் பேசவிடாமல் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தனர்.

அவர்களைக் கீழே இறங்குமாறு பலமுறை கூறியும் அதைக் கேட்காமல் தொடர்ந்து திருமாவளவனுக்கு இடையூறு கொடுத்தனர்.

இதனால், பொறுமை இழந்து ஆத்திரம் அடைந்த அவர், வாகனத்தின்மீது ஏற முயன்ற தொண்டர்கள் கன்னத்தில் அறைந்தார். மேலும், கடும் கோபத்துடன், “நான் பேசவா? வேண்டாமா?” எனக் கேட்டு அவர்களை வாகனத்திலிருந்து கீழே இறங்குமாறு கண்டித்தார்.

பிரசாரத்தை நிறைவுசெய்த பிறகு அப்பகுதியில் இருக்கும் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பார் எனத் தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் செய்த ரகளையால் சிலைக்கு மாலை அணிவிக்காமல் திருமாவளவன் சென்றுவிட்டார்.

அந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமாவளவன் தொண்டர்களின் கன்னத்தில் அறைந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்