நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடல் நடுவே சிலை அமைத்து ஜனவரி 1 ஆம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதையொட்டி இப்போது அங்கு வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கட்கிழமை தொடங்கி வைத்தார்.
அத்துடன், திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே ரூ.37 கோடி செலவில் 77 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்துக்கு அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலத்தையும் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள 133 அடி திருவள்ளுவர் சிலை கடந்த 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
சிலையின் நுழைவுவாயிலில் ‘பேரறிவு சிலை’ (Statue of Wisdom) என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்து, வெள்ளி விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். பின்னர், கண்ணாடி இழை கூண்டுப் பாலத்தை திறந்து வைத்தார். பாலத்தின் வழியே விவேகானந்தர் பாறை வரை நடந்து சென்ற முதல்வர், மீண்டும் பாலம் வழியாக திருவள்ளுவர் பாறைக்குத் திரும்பினார். அமைச்சர்கள், பிரமுகர்களும் உடன் சென்றனர். பின்னர், திருவள்ளுவரின் பாதத்தில் முதல்வர் மலர் தூவி வணங்கினார்
வெள்ளி விழா நிகழ்ச்சியில், திருக்குறள் அறநெறியை பரப்பி வரும் 25 தமிழ் ஆர்வலர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார்.
பூம்புகார் போக்குவரத்துக் கழக வளாகத்தில், பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்த திருவள்ளுவர் மணல் சிற்பத்தைப் பார்வையிட்டார்.
அதன்பின், படகு இல்ல வளாகத்தில் ரூ.11 கோடியில் அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளிக்காட்சியைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக இரவு 7 மணி அளவில், கன்னியாகுமரி அரசு சுற்றுலா மாளிகை அருகே சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீடு, ‘தினம் ஒரு திருக்குறள்’ என்ற நூலின் புதிய பதிப்பு வெளியீடு, திருவள்ளுவர் பசுமைப் பூங்கா, திருக்குறள் கண்காட்சி திறப்பு விழா, திருவள்ளுவர் அலங்காரத் தோரண வாயில் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.