சென்னை: பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த மூன்று தீவிரவாதிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (ஏஐ) உதவியோடு கண்டுபிடித்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமிழகக் காவல்துறை தலைவர் டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
“கைதான அபுபக்கர் சித்திக், டெய்லர் ராஜா, முகமது அலி ஆகிய மூவரும் கோவை குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு வழக்கு கடந்த முப்பது ஆண்டுகளாக தேடப்பட்டு வருபவர்கள்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.
“தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் முன்னதாகச் சிக்கினர். அவர்களுடன் தொடர்புடையவர் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்.
“அவர் மீது தமிழகத்தில் 5 வழக்குகளும், கேரளாவில் 2 வழக்குகளும், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு வழக்கும் உள்ளன. அபுபக்கர் சித்திக்கை அம்மாநில காவல்துறையும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் 30 ஆண்டுகளாகத் தேடி வந்தன. இவர் உள்பட மேலும் சிலரை கைது செய்ய ‘ஆபரேஷன் அறம்’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் தேடத் தொடங்கினோம்,” என்று
“அவரது பழைய புகைப்படங்களை வைத்து ஏஐ தொழில்நுட்பம், தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன் தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா அருகே சித்திக் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
“இதேபோல் 30 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா ‘ஆபரேஷன் அகழி’ என்ற சிறப்பு நடவடிக்கை மூலம், ஏஐ தொழில் நுட்பம், கர்நாடக மாநிலக் காவல்துறை உதவியோடு கைது செய்யப்பட்டார்.
“பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த முகமது அலியையும் ஆந்திராவில் கைது செய்தோம். மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம். தமிழகக் காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகளால், வரும் காலங்களில் தமிழகத்தில் தீவிரவாதச் செயல்களும் கடுமையான குற்றங்களு நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்றும் டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார்.