சென்னை: மதுரை மற்றும் திருச்சியில் அமையும் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு (டைடல் பார்க்) 2024 டிசம்பரில் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது.
இதையடுத்து, இரு நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி தகவல் தொழில்நுட்ப பூங்கா பஞ்சப்பூர் கிராமம் அருகே 5.58 லட்சம் சதுர அடியில் ரூ.315 கோடியில் தரைத் தளம் மற்றும் 6 தளங்களுடன் அமையவுள்ளது.
அதேபோல், மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் ரூ.289 கோடியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமையவுள்ளது.
சென்னை, கோவை மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு முயற்சிகளில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

