சென்னை: தமிழக எம்.பி., எம்எல்ஏக்கள்மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வெளியிட மாநிலத் தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவெகவின் சென்னை மண்டல வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் ஆதித்ய சோழன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் முன்னாள் இந்நாள் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்த விவரங்களை வழங்கக்கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்தேன்.
அத்துடன், அவர்கள்மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்களையும் வழங்கும்படி கோரியிருந்தேன். ஆனால், எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, மாநிலத் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தேன். அங்கும், எந்தப் பலனும் இல்லை.
மக்கள் நலன் கருதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்படும் தகவல்களைத் தர மறுப்பது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
எனவே எனது கோரிக்கை தொடர்பான விவரங்களை வழங்க மாநிலத் தகவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என ஆதித்ய சோழன் மனுவில் கூறியுள்ளார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.