சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமாகா தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் புதிய நீதிக் கட்சியின் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பின் இரு கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் ஆகியோருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோயல், “தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடிக்கும்.
“தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய திமுக அரசின் ஊழலை தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டேயிருக்கும்.
“தமிழர் பண்பாட்டையும் பெருமையையும் சிதைக்க முயலும் திமுகவின் முயற்சிகளைத் தடுப்பதில் எங்களுடைய கூட்டணி ஒற்றுமையாகவும் உறுதியாகவும் உள்ளது.
“தமிழகத்தில் தூய்மையான, பொறுப்புமிக்க மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட ஆட்சியை வழங்க எங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம்,” என்றார்.

