சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவிக்குப் போட்டியிட நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்தார். அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுபோல, நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை அண்ணாமலை, எல். முருகன், வானதி ஸ்ரீனிவாசன் உள்பட 10 தலைவர்கள் முன்மொழிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு\மனு தாக்கல் செய்வார் என்றும் அவர் ஒருமனதாக பாஜக மாநிலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு சனிக்கிழமை (ஏப்ரல் 12) பதவியேற்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் பிற்பகல் இரண்டு மணிக்கு மேல் தொடங்கிய நிலையில், ஒரு சில மணி நேரத்துக்கு முன்பே பாஜக அலுவலகத்துக்கு வந்த நயினார் நாகேந்திரன், அலுவலக வாயிலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு உள்ளே சென்றார்.
பாஜக தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வெள்ளிக்கிழமை விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்திருக்கிறார்.