திருப்பூர்: இந்துக் கோவில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் மூன்று சென்ட் நிலத்தைத் தானமளித்த நெகிழ்ச்சி சம்பவம் தமிழ்நாட்டின் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது.
காங்கேயம் அருகே ஒட்டபாளையம் எனும் சிற்றூரிலுள்ள ரோஸ் கார்டன் பகுதியில் இந்துக்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. இந்துக்கள் வழிபாடு நடத்த கோவில் இல்லாத நிலையில், அதற்குப் போதுமான இடத்தைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், கோவில் கட்டுவதற்காக அப்பகுதி முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசலுக்குச் சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான மூன்று சென்ட் நிலத்தைக் கோவில் கட்ட தானமாக வழங்கினர்.
இந்நிலையில், கோவில் கட்டும் பணி நிறைவடைந்து, அண்மையில் திருக்குட நன்னீராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, முஸ்லிம்கள் தங்கள் பள்ளிவாசலிலிருந்து மேளதாளத்தோடு ஏழு தட்டுகளில் சீர்வரிசை எடுத்துச்சென்று கோவிலுக்கு வழங்கினர். அவர்களுக்குக் கோவில் நிர்வாகம் உற்சாக வரவேற்பு அளித்தது.
இந்நிகழ்வு, சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் சமத்துவம், சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையிலும் அமைந்துள்ளதாக அப்பகுதிவாசிகள் பெருமையுடன் கூறுகின்றனர்.

