சிதம்பரம்: பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகச் சான்றிதழ்களைப் போலியாகத் தயாரித்து விற்பனை செய்த இருவரைத் தமிழகக் குற்றப்பிரிவு தனிப்படைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீதிகுடி - கோவிலாம் பூண்டி இடையே சாலையோரமாக பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகச் சான்றிதழ்கள் மூட்டையாகக் கிடந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் ரகுபதி உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் தலைமையில் காவல்துறையினர் சான்றிதழ்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்பில் சிதம்பரம் மன்மதசாமி நகரைச் சேர்ந்த சங்கர் தீட்சிதர், 37, மீதிகுடியைச் சேர்ந்த நாகப்பன், 48, என்ற இருவரைக் கைது செய்த காவல்துறை, அவர்கள்மீது வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.