சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு இருமுறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், விக்கிரவாண்டி, செங்குறிச்சி, சமயபுரம், திருச்சி, மதுரை, வாலாஜாபாத் உள்ளிட்ட முக்கியமான சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
வாகனங்களின் வகையைப் பொறுத்து, ஒருவழிப் பயணம், மாதாந்தரக் கட்டணங்கள் ரூ.5 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளன. பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணம் ரூ. 240லிருந்து ரூ. 250 ஆகவும் லாரிகளுக்கான கட்டணம் ரூ. 380லிருந்து ரூ. 400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரே நாளில் பலமுறை பயணம் மேற்கொள்ளும் பேருந்து, லாரிகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
“ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்தத் திடீர் சுங்கக் கட்டண உயர்வு வாடகை வாகன உரிமையாளர்கள், வணிகர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என ஒரு தரப்பினர் கவலையை வெளிப்படுத்தி உள்ளதாகத் தமிழக ஊடகச் செய்திகள் கூறியுள்ளன.


