நெல்லை: தமிழ்நாட்டில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மொத்த விற்பனைச் சந்தைக்கு நெல்லை, தென்காசி பகுதிகளில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் விலை மேலும் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
விளைச்சல் அதிகரிப்பு காரணமாக தக்காளி விலை மேலும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும், பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 3½ கிலோ பல்லாரி கடந்த வாரம் ரூ.100க்கு விற்பனையானது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) மேலும் விலை குறைந்து 4 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.
அடுத்த தரத்தில் உள்ள பெரிய வெங்காயத்தின் கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 வரை விற்பனையானது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையிலும் தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது.

