சென்னை: தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
அந்த நிலையத்தின் அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடலூர், விழுப்புரம், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலோர மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.