திருச்சி: திருச்சி அருகே உயிரிழந்து விட்டதாகக் கருதி மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட பெண் கண் விழித்ததை அடுத்து, மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சியை அடுத்த வேலக்குறிச்சி எஸ். மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பம்பையின் மனைவி சின்னம்மாள் (வயது 60).
இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் இன்றி இறக்கும் தருவாயில் இருந்ததால் உறவினர்கள் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், சின்னம்மாள் இறந்ததாகக் கருதி அவரின் உடலை மயானத்துக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட இருந்த நிலையில், திடீரென கண் விழித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக தனியார் மருத்துவ வாகனம் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று அனுமதித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.