சீமான் தரப்புக்கு எதிராக திருச்சி எஸ்.பி. ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு

2 mins read
0af010f5-fea2-41c0-9d7c-56fb2d351a88
திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரான வருண்குமார். - கோப்புப் படம்: ஊடகம்

திருச்சி: ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலி சமூக ஊடகக் கணக்குகளையும் அதன்பின் ஒளிந்து கொண்டு நச்சுக்கருத்துகளைப் பரப்பும் விஷமிகளையும் அவர்களை கூலிக்காகத் தூண்டிவிடும் அந்தக் கட்சி பொறுப்பாளர்களையும் சட்டத்தின்படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன் என்று திருச்சி எஸ்.பி. வருண்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது திருச்சி காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரான வருண்குமாரை விமர்சனம் செய்தனர்.

இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. வருண்குமார் எச்சரித்து இருந்தார். எனினும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் எஸ்பி-யை மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் மீதும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக எஸ்பி-யான வருண்குமார் சனிக்கிழமை (ஆக.24) தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “2021ஆம் ஆண்டு யூடியூபர் ஒருவர் ஒரு அரசியல் கட்சி பின்புலத்தோடு பொய்ச் செய்திகளைப் பரப்பி திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரிய அளவில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினார். அப்போது, திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த நான் அந்த யூடியூபரை கைது செய்து, பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் அடைத்தேன்.

அண்மையில், அதே யூடியூபர் பதிவு செய்த அவதூறுகளால் இணையக் குற்றத் தடுப்புக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த யூடியூபர் சார்ந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் என்னைக் கடுமையாகச் (சில சாதி பெயர்களைக் குறிப்பிட்டு) சாடினார். அது விமர்சனத்தையும் தாண்டி தீவிர அவதூறு கோணத்தில் இருந்தது.

எனவே, அதற்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் நோட்டீஸை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பினேன். அதையடுத்து என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் வசைகளையும், ஆபாசமான, அவதூறான செய்திகளையும், அருவருப்பான வாக்கியங்களுடன் எக்ஸ் தளத்தில் பரப்பினர்.

என் குழந்தைகள் மற்றும் என் குடும்பப் பெண்களின் புகைப்படங்களும் தரம்தாழ்ந்து ஆபாசமாகச் சித்திரிக்கப்பட்டன. இவ்வாறு தொடர்ந்து ஆபாச சித்திரிப்பு வேலைகளில் ஈடுபடும் இந்தக் கணக்குகளை ஆராயும்போது இவை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரில் தொடங்கி மாநில பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தூண்டுதலால் இயக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலிக் கணக்குகளையும் அதன்பின் ஒளிந்து கொண்டு ஆபாசம் பரப்பும் விஷமிகளையும் அவர்களை கூலிக்காக தூண்டிவிடும் அந்தக் கட்சி பொறுப்பாளர்களையும் சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன்.

அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது ரூ.2 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளேன். இதில் எந்தவித சமரசமும் இல்லை,” என்று வருண்குமார் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்