சென்னை: கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அந்தக் கட்சிகளிடம் இது குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் வழி அறிவுறுத்தி உள்ளது.
ஓர் அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதும் வருமான வரி ரத்து அங்கீகாரம், பொதுச் சின்னம் ஒதுக்கீடு, நட்சத்திர வேட்பாளருக்கான பிரதிநிதித்துவம் ஆகிய சலுகைகளைப் பெற முடியும்.
தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தலை எதிர்கொள்ள மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
ஆனால், கடந்த 2019 முதல் தற்போது வரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற சில கட்சிகள் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. அவற்றுள் சில கட்சிகள் இல்லாமல் போய்விட்டன.
எனவே, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் மேற்குறிப்பிட்ட 24 கட்சிகளைத் தொடர்ந்து இடம்பெறச் செய்வதா அல்லது நீக்குவதா என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழகத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.