மதுரை: மதுரை, மேலூர் பகுதியில் ஒருபோதும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது என்று தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார்.
மதுரையில் அமைச்சர் மூர்த்தியை சந்தித்து அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி கிராமத்தினர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முறையிட்டனர். தடையை மீறி பேரணியாகச் சென்ற கிராமத்தினர் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, “தமிழக அரசு டங்ஸ்டன் சுரங்கம் வருவதை ஒருபோதும் ஏற்கவில்லை. மேலூர் பகுதியில் ஒரு போதும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது, வரக்கூடாது என சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி ஆதரவோடு தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என உறுதியளித்தார்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளப்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து இப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனவரி 7ஆம் தேதி கிட்டத்தட்ட 16 கிலோ மீட்டர் தூரம்வரை பேரணியாகச் சென்று மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக அடையாளப் போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை அடுத்து நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக இது அமைந்தது.

