விழுப்புரம்: உலகெங்கும் பிப்ரவரி 14ஆம் தேதி அன்பர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் வசிக்கும் இரு இளையர்கள் ஆடு திருடி காவலர்களிடம் வசமாக சிக்கிக்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவர்களான அரவிந்த்குமார், 20, மற்றும் மோகன், 20. நண்பர்களான
இவ்விருவரும் அன்பர் தினத்தைக் கொண்டாட மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனாலும், அவர்களிடம் போதிய பணம் இல்லை.
இதனையடுத்து, ஆடுகளைத் திருடி விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் அன்பர் தினத்தைக் கொண்டாட இருவரும் முடிவுசெய்தனர்.
இதற்காக விழுப்புரம் அருகே உள்ள மலையரசன்குப்பம் பகுதிக்குச் சென்ற நண்பர்கள் இருவரும், ரேணுகா என்பவர் தனது பட்டியில் அடைத்து வைத்திருந்த 10 ஆடுகளில் ஒன்றை மட்டும் திருடிக்கொண்டு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டனர்.
அப்போது ஆடு கத்தவே, சத்தம் கேட்டு ஓடி வந்த ரேணுகா சத்தமிட்டு ஊரைக் கூட்டிவிட்டார். கூக்குரல் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், அவ்விரு இளையர்களையும் மடக்கிப் பிடித்து, கண்டாச்சிபுரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.


